விஷால் கதாநாயகனாக நடித்து வரும் 32 ஆவது படம் லத்தி. இதை விஷாலின் நண்பர்களான நடிகர்கள் நந்தா, ரமணா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா.
இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 22 ஆம் தேதி மாலை விஷாலின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தத் தகவல் படத்தின் இயக்குநர் வினோத் குமாருக்கே தெரியாமல் வெளியானதாகச் கூறப்படுகிறது. சமூகவலைதளங்களில் பார்த்துதான் அவர் இந்தத் தகவலை அறிந்துகொண்டாராம். தன்னிடம் கேட்டு ஆலோசிக்காமல் வெளியீட்டுத் தேதியை அறிவித்ததுகூட கெளரவ குறைவாக அவர் எண்ணவில்லை. ஆனால் இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறது என்பதால் பதட்டமாகியிருக்கிறார். அதற்கான தேதிகளைக் கூட சொல்லாமல் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிக்கப் போய்விட்டார் விஷால்.
இன்னும் படப்பிடிப்பே முழுமை பெறாத நிலையில் வெளியீட்டுத் தேதியை அறிவித்ததால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். விஷால் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோரின் இந்தச் செயல் இயக்குநர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
ஏற்கனவே தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளராக விஷால் முதல் முறையாக பொறுப்புக்கு வந்த போது அங்கு ஏற்பட்ட பல்வேறு குழப்பமான நடவடிக்கைகளுக்கு நந்தா, ரமணா இருவரும் காரணம் என சக நிர்வாகிகளால் விமர்சிக்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது விழாக்குழுவில் நிகழ்ச்சியை வடிவமைக்கும் பொறுப்பாளராக நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டார் நந்தா, ரமணா இருவரின் வரம்பு மீறிய செயல்களால் விழாக்குழுவில் இருந்து விலகுவதாக பார்த்திபன் அறிவித்து வெளியேறினார்.
தற்போது விஷால் நடிக்கும் படத்தின் இயக்குநரை அவமதிக்கும் வகையில் வெளியீட்டு தேதியை தன்னிச்சையாக விஷால் அறிவிக்க நந்தா, ரமணா இருவருமே காரணம் என்கின்றனர் இயக்குநர்கள் வட்டாரத்தில்
**-இராமானுஜம்**