உசிலம்பட்டி அருகே கடைசி விவசாயி திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்த முதியவரின் புகைப்படத்தை பள்ளி சுவற்றில் வரைந்து அவருக்கு கௌரவம் சேர்த்திருக்கிறது அரசுப் பள்ளி ஒன்று.
காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்த கடைசி விவசாயி திரைப்படம் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய பெருங்காமநல்லூரைச் சேர்ந்த நல்லாண்டி என்ற முதியவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.
திரைப்படம் வெளியாகும் முன்பே முதியவர் நல்லாண்டி மறைந்திருந்தாலும், அவரை கௌரவப் படுத்தும் நோக்கில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாடையம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் ஓவியத்தில் கடைசி விவசாயி நல்லாண்டியின் புகைப்படத்தை வரைந்து விவசாயம் சார்ந்த திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.
பள்ளி சார்பில் வரையப்பட்டுள்ள இந்த கடைசி விவசாயியின் ஓவியத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
**-இராமானுஜம்**