world water day

”தண்ணீரை காக்க வேண்டும்”: முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்

உலக தண்ணீர் தினமான இன்று (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரின் அருமை, தேவை குறித்துப் பேசியுள்ளார்.

1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 30 வருடங்களாக உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரின் அருமை, தேவை, முக்கியத்துவம் குறித்துப் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கு அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும் மாறினாலும் மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான், ’நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர்.

தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ‘நிலம், தீ, நீர் விளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது.

தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்றவர் திருவள்ளுவர். மனித உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும், கூடினாலும் தீமை ஏற்படும் என்ற மருத்துவ புலமையோடு ’மிகினும், குறையினும் நோய் செய்யும்’ என்றார் வள்ளுவர்.

திருமந்திரமும் தேவாரமும் திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது. நீர் நிலைகளின் அளவை பொறுத்துப் பெயர் வைத்தவர் தமிழர். குட்டை, குளம், ஊரணி, ஏரி, ஏந்தல், கண்மாய், ஆறு, நீரோடை, கடல் என்று பிரித்துப் பெயர் சூட்டினர் தமிழர். எல்லாமே நீர் உள்ள இடம் தான். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை, அளவு கொண்டது.

கடல் நீரை முந்நீர், ஆற்று நீரை நன்னீர், குடிநீரை இந்நீர், குளிர்ந்த நீரைத் தண்ணீர் என்றும் நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டியது தமிழ் இனம். தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது தமிழ் பழமொழி.

நமது உடலின் அனைத்து செயல்பாடுகளும் முறையாக செயல்படுவதற்குத் தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட மனிதரால் பல நாட்கள் இருக்க முடியும் நீரின்றி இருக்க முடியாது. இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும்.
நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்க கூடாது.

பாதுகாப்பாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாசுபடாமல் காக்கவேண்டும். இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

புவி வெப்பமயமாகி வருகிறது. இதில் இருந்து நம்மை காப்பது தண்ணீர் தான்” என்று பேசியுள்ளார்.

மோனிஷா

டெல்லியில் நிலநடுக்கம்: விடிய விடிய சாலையில் தஞ்சம்!

நடுங்கும் நிலம் – கனவு கண்ட திருமா

world water day today
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *