வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அவற்றை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் இயங்கி வரும் வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட்,
இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட்,
என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரண்டாவது நிலையில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 600 மெகாவாட், முதல் நிலையில் உள்ள மூன்றாவது அலகில் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் என 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை பழுதுநீக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என அனல் மின்நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
-ராஜ்