மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.
இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் பிஷப் கூறும்போது, “இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாதது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும். தகுதி சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி செயல்திறன் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கார்லஸ் பிரைத்வெய்ட் கூறும்போது, “கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது. கடைசியாக நாம் சந்தித்த 18 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7 போட்டிகளில் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளோம். அணியின் பந்து வீச்சில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திறமையான வீரர்களை அணியில் சேர்ப்பதையும் அவர்கள் தங்கள் திறமையை தொடர்ந்து வளர்த்து கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். அணியில் சரியான கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். வெற்றியை தொடர்ந்து தக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்
செந்தில் பாலாஜி சகோதரருக்கு மீண்டும் சம்மன்!