இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெண்களை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்வது, அவர்கள் மீது வன்முறையை தூண்டுவது மட்டுமில்லாமல், பெண்களின் புகைப்படத்தை மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. இதனால் சில பெண்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.
தற்போது, பெண்களை இணையதளங்கள், எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் மூலம் தவறாக சித்தரிப்பவர்கள் மீது 1986 ஆம் ஆண்டு சட்டத்தின் படி பெண்களை அநாகரீகமாக சித்தரிக்கும் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த சட்டத்தின்படி, முதல்முறை தவறு செய்யும் போது 2 ஆண்டுகளும், இரண்டாவது முறையாக தவறு செய்யும் போது 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால் தற்போது இணைய யுகத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயல்பாடுகளை தடுக்க அந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என மத்திய அரசு கருதுகிறது. அதனால், இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
அதனால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ளதை போல் தண்டனை விதிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சட்டத்தின்படி, பெண்களை தவறாகச் சித்தரிப்பவர்களுக்கு மூன்று முதல் ஐந்தாண்டு வரையும், பாலியல் ரீதியாக வெளிப்படையாக சித்தரிப்பவர்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டு வரை தண்டனையும் வழங்கப்படும். அதே போன்று, பெண்களை அநாகரீகமாக சித்தரிக்கும் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.�,