சிக்கா வைரஸினால் பாதிக்கப்படும் பெண்களின் குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியவர்களாகப் பிறப்பதாக நேற்று (ஆகஸ்ட் 15) தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மானேசரி்லுள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிக்கா வைரஸ் கொசுக்களின் மூலமாகப் பரவுகிறது. இந்த சிக்கா வைரஸால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மைக்ரோசெப்ஃலி என்ற ஊனத்துடன் பிறக்கின்றன. மைக்ரோசெப்ஃலி என்பது குழந்தைகளின் தலையானது நார்மல் அளவை விட சிறியதாக இருக்கும். அதன் தொடர்ச்சியாக அவர்களின் அறிவு வளர்ச்சி குன்றியவர்களாக (Mental Retardation – MR) இருப்பார்கள்.
உலக சுகாதார நிறுவனம் சிக்கா வைரஸுக்கும் தலை சிறியதாக உள்ள குழந்தைகளுக்கும் வலிமையான தொடர்புள்ளது என்று அங்கீகரித்துள்ளது. இந்த ஊனத்தை சிக்கா வைரஸ் எப்படி உருவாக்குகிறது என்பது குறித்து அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.
தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் இந்த ஆய்வு முடிவுகளை செல்லின் மரணம் மற்றும் வேறுபாடு என்ற தலைப்பில் ஆய்வுத்தாளாக அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் சிக்கா வைரஸ் கருவில் குழந்தையை முடமாக்கி விடுகிறது அல்லது மூளையின் ஊனத்தையோ அல்லது சிசுவின் மரணத்தையோ ஏற்படுத்துகிறது என்று நிரூபித்துள்ளனர்.
ஆராய்ச்சிக் குழுவானது கருவின் ஸ்டெம் செல்களை எடுத்து எப்படி அதை சிக்கா வைரஸ் பாதிக்கிறது என்பதை ஆராய்ந்தது. சிக்கா வைரஸ் செல்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது குறிப்பாகக் கருவிலுள்ள மூளையின் வளர்ச்சியை முடமாக்குகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.�,