�
நடிகை கஜோல் தன் கணவரும் நடிகருமான அஜய் தேவ்கன்னுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய பாலிவுட் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
தமிழில் ‘மின்சார கனவு’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை கஜோல். பின்பு பாலிவுட் திரையுலகுக்குச் சென்று பல வெற்றிப் படங்கள் தந்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். நடிகர் அஜய் தேவ்கன்னை காதல் திருமணம் செய்த கஜோல், அவருடன் கடைசியாக கடந்த 2010இல் வெளியான ‘டூன்பூர் கா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதன் பிறகு ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இயக்குநர் பிரதீப் சங்கர் இயக்கத்தில் ஒரு புதிய பெயர் சூட்டப்படாத பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பத்திரிகை சந்திப்பில் நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். இச்செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி 2’ பாகம் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி தந்த நடிகை கஜோல் வெகு காலம் கழித்து தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தார். தற்போது இவர்கள் ஜோடி சேரும் இந்த புதிய திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவருமென எதிர்பார்க்கப்படுகிறது.�,