உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் ஹவுரா – ஜபல்பூர் எக்ஸ்பிரஸின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்திரபிரதேசத்தின் ஓபுரா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில்,’ ஹவுராவில் இருந்து ஜபல்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் சோன்பத்ரா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். ரயில் மிதமான வேகத்தில் சென்றதால் விபத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் உத்தரபிரதேசத்தில் நிகழும் மூன்றாவது ரயில் விபத்து இதுவாகும். கடந்த 19ம் தேதி முசாஃபர்நகர் மாவட்டத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய நாட்களாக ரயில்கள் அதிகளவு விபத்துக்குள்ளாவது பயணிகளுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது அதிகளவு விபத்துகள் நிகழ்ந்ததால் அவர் பதவி விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செப்.3ம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது பியூஸ் கோயலுக்கு ரயில்வே இலாகா ஒதுக்கப்பட்டது. அவர் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றபின் நிகழும் முதல் ரயில் விபத்து இதுவாகும்.
இதைத்தொடர்ந்து , அமைச்சர் பியூஸ் தொடரும் ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,