கோவையில் தேசியக் கொடியை அவமதித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காளியப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் வெற்றி (25). இவர் விளம்பர பேனர் வடிவமைக்கும் பணியைச் செய்துவருபவர்; தமிழ்நாடு திராவிடர் கழக முன்னாள் உறுப்பினர்.
ஏப்ரல் 3ஆம் தேதி இரவு வேளையில் காளியப்பகவுண்டன் புதூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்திற்குள் வெற்றி நுழைந்துள்ளார். அங்கிருந்த தேசியக் கொடியைக் கீழே போட்டு செருப்புக் காலுடன் மிதித்துள்ளார். தேசியக் கொடியை மிதிக்கும் காட்சியை வீடியோவாக எடுத்து, தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது.
இது குறித்து, ஆனைமலையைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் உறுப்பினர் கருணாகரன் போலீஸில் புகார் செய்தார். 1971ஆம் ஆண்டின் தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச் சட்டப் பிரிவு 2இன் கீழ் வெற்றி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 6) போலீசார் வெற்றியைக் கைது செய்தனர்.
வெற்றியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில மற்றும் யூனியன் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. அதுபோன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் மக்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. இதனால்தான் தேசியக் கொடியைக் காலின் கீழ் போட்டு மிதித்தேன்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, வெற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
�,”