அனைத்து அரசியல் கட்சிகளாலும் தேர்தல் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் நியமித்துள்ளார்.
சட்டசபை, லோக்சபா தேர்தல் களங்களில் கடந்த 15 ஆண்டுகளாக அடிபடும் பெயர்தான் பிரசாந்த் கிஷோர். 2012 குஜராத் சட்டசபை தேர்தலிலும் 2014இல் லோக்சபா தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதன் பின்னணியில் வியூகங்களை வகுத்தவர் பிரசாந்த் கிஷோர்.
2014 லோக்சபா தேர்தலில் முன்னணி இணைய ஊடகங்கள், சமூக வலைதளங்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி பாஜகவின் வாக்குறுதிகளை பிரமாண்டமாக காட்டி வாக்குகளை அறுவடை செய்ததில் பிரசாந்த் கிஷோர் மிக முக்கியப் பங்கு வகித்தார். 2016 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தமிழகத்தில் அதிமுக அமோகமாக பயன்படுத்தியது.
அதிமுகவின் ஐடி விங் செயலாளரான சுவாமிநாதனின் இந்த முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்க பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியது. அதேபோல் 2015ஆம் ஆண்டு பிகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்ததிலும் பிரதான பங்கு வகித்தவர் சாட்சாத் இதே பிரசாந்த் கிஷோர்தான்.
பிரசாந்த் கிஷோர் நடத்தி வந்த இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி அடுத்த தேர்தலுக்கு எந்த கட்சியுடன் கை கோர்க்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமது தேர்தல் வியூகங்களை எந்த கட்சிக்கும் இனி பயன்படுத்தப் போவதில்லை. என்னுடைய நிறுவனத்தையும் பிறரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் செப்டம்பர் 16இல் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். தற்போது பிரசாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக நிதிஷ்குமார் நியமித்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி, கிஷோரின் நியமனமானது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் வாக்காளர்களை நாங்கள் சென்றடைய பெருமளவில் உதவும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த பொறுப்பு மற்றும் மரியாதைக்காக கட்சி தலைமைக்கு இதயத்தில் இருந்து நன்றி கூறுவதாகவும், நீதியின் சித்தாந்தம் மற்றும் பிகாரின் வளர்ச்சிக்கு கடமைப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரஷாந்த் கூறியுள்ளார்.�,