�
ஆப்பிள் பழங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதால் அவற்றின் விலை இந்தியச் சந்தைகளில் கடுமையாகச் சரிந்துள்ளது.
இந்த ஆண்டில் ஆப்பிள் உற்பத்தி முந்தைய இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த மாதத்தில் ஆப்பிள் விலை 60 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளதால் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். சமீபத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், அதிக இறக்குமதி காரணமாகவும்தான் ஆப்பிள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்பிளுக்கான இறக்குமதி வரியை 75 சதவிகிதமாக உயர்த்துவதற்கு முன்னரே வாசிங்டன் ஆப்பிள் இந்தியாவுக்குள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, லாரிகள் வேலைநிறுத்தம், கேரள வெள்ளம் போன்ற காரணிகளால் ஆப்பிள்களுக்கான தேவை குறைந்துவிட்டது.
இதுகுறித்து இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஜுபால் பகுதியைச் சேர்ந்த எகோகார்ட் சொசைட்டி அமைப்பின் தலைவரான லக்ஷ்மன் தாகுர், *டிரைபூன் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “அதிக இறக்குமதி காரணமாக, பராலா, தல்லி, சோலன் உள்ளிட்ட உள்ளூர் சந்தைகளில் ஒரு பெட்டி ஆப்பிள் விலை ரூ.3,200லிருந்து ரூ.1,600 ஆகக் குறைந்துவிட்டது. தென்னிந்தியாவில் ஆப்பிள்களை வாங்க ஒரு சிலரே உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த ஆப்பிகள் ரூ.1,500 முதல் ரூ.1,700 வரையில் சந்தைகளில் குவிக்கப்பட்டுள்ளதால் இமாசலப் பிரதேசத்தில் விளைந்த நம்நாட்டு ஆப்பிள்களை வாங்க எவரும் முன்வருவதில்லை” என்று கவலை தெரிவித்துள்ளார்.
�,