சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென விசிக வலியுறுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அசோக் நகரிலுள்ள அம்பேத்கர் திடலில் இன்று (நவம்பர் 8) நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், திமுக கூட்டணியில் எத்தனை இடங்களைக் கேட்டுப்பெறுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானத்தில், “சென்னை மாநகராட்சி பெரும்பான்மையாக தலித் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகும். இத்தொகுதியை ஏற்கனவே தனித் தொகுதியாக அறிவித்திருக்க வேண்டும். தொடர்ந்து ஏனோ இது புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சென்னை அல்லாத பிற மாநகராட்சிகளிலிருந்தே தனித்தொகுதி தேர்வுசெய்யப்படுகிறது. இந்த ஐந்தாண்டுகளுக்கான தனித் தொகுதியாக சென்னைப் பெருநகர மாநகராட்சியைத் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய அளவிலான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத் துணைத் தலைவர் பதவிகளிலும் தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், “திருவள்ளுவருக்குக் காவி உடுத்தி, திருநீறுபூசி அவர்மீது மதம்சார்ந்த அடையாளத்தைத் திணித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிற தமிழ்நாடு பாஜகவினர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைமீது சாணி அடித்தும் காவித்துணி போர்த்தி உருத்ராட்சம் அணிவித்தும் அவரை அவமதித்த சமூகவிரோதிகள் ஆகியோரைக் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் இருந்ததைப்போல அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் திருவுருவப்படம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றை அமைத்திட வேண்டும்” எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
�,”