அதிமுக-வின் நெல்லை மாவட்டப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் சமீபகாலமாக செய்திகளில் அடிபடாமல் அமைதியாகவே இருந்துவந்துள்ளார். இந்நிலையில் இப்போது அவரை மையமாக வைத்து ஒரு தகவல் டெல்லியில் இருந்து கசிகிறது. அது என்னவெனில், நயினார் நாகேந்திரனை தங்கள் பக்கம் கொண்டுவர பாஜக முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது என்பதுதான்.
நயினார் நாகேந்திரன் 89இல் அதிமுக-வில் சேர்ந்து, முதலாவதாக பணகுடி நகரச் செயலாளராக பதவி வகித்தார். பின்பு ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணிச் செயலர், பின்னர் திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலர், இடையில் தேர்தல் பிரிவு இணைச் செயலர், மீண்டும் ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலர் என்று கட்சிப் பதவிகள் வகித்தார். 2001இல் முதன்முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். 2006இல் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் அதிமுக-வில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர்.
2011ஆம் ஆண்டு சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சில நாள்களில் நயினார் நாகேந்திரனும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பதவியும் இல்லாத நிலையில் 2016 சட்டமன்றத் தேர்தலில் சசிகலா வாயிலாக சீட் பெற்று திருநெல்வேலி தொகுதியில் நின்றார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வெறும் 600 ஓட்டுகள் அதிகம் வாங்கி நயினாரை தோற்கடித்தார்.
அதன்பின் அமைதியாக இருந்த நயினாரை, சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வெளியிட்ட முதல் அறிவிப்பிலேயே கழக கொள்கைபரப்புத் துணைச் செயலாளராக நியமித்தார். அதன்பிறகு மாறிய அரசியல் சூழலில் நயினார் தன் ஹோட்டல் தொழிலில் பிஸியாகிவிட்டார்.
இந்த நிலையில்தான் நெல்லை மாவட்டத்தில் பாஜக-வுக்கு மக்களிடம் அறிமுகமான முகம் தேவை என்று யோசித்த மத்திய அமைச்சர் பொன்னார், நயினாரிடம் பேச… அதன்பின் டெல்லியுடனே பேசிவிட்டாராம் நயினார். “விரைவில் அவருக்கு மத்திய அரசின் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டு தென் மாவட்டத்தில் பாஜக-வுக்காக தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்குவார்” என்கிறார்கள் நயினாரின் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர்.
�,