�அன்னை மருத்துவக் கல்லூரியில் படித்த 144 மாணவர்களை ஒரு வாரத்துக்குள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரியை ஆய்வு செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாகத் தங்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அக்கல்லூரி மாணவர்கள் 144 பேர் தங்களை வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, இன்னும் ஒரு மாதத்துக்குள் மாணவர்கள் அனைவரையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 24) விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் உள்ள 21 அரசுக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒரு வாரத்துக்குள் கவுன்சலிங் நடத்தி 144 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும். மேலும், இதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.�,