�
வருகிற 2018ஆம் ஆண்டுக்குள் தொலைத் தொடர்புத்துறையில் சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பான அசோசேம் மற்றும் கே.பி.எம்.ஜி. நிறுவனங்கள் இணைந்து தொலைத் தொடர்புத்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ளன. அதில், ‘வேகமான 4ஜி சேவை, 5ஜி சேவை விரிவாக்கம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளால் இந்தியத் தொலைத் தொடர்புத்துறையில் 2021ஆம் ஆண்டுக்குள் சுமார் 8,70,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இத்துறையில் அதிகரித்துவரும் தேவையை நிவர்த்தி செய்யும் அளவுக்கு ஆள் பலமோ, போதுமான திறமையோ தற்போது இல்லை. எனவே, திறன் மேம்பாட்டுடன் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
இத்துறைக்கான திறன் மேம்பாட்டு கவுன்சில் அதற்கான தொழில்நுட்ப ரீதியிலான திறன் மேம்பாட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தொலைத் தொடர்புத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான திறன் மேம்பாடு மிகவும் அவசியமாகிறது. இத்துறையானது வாடிக்கையாளர்கள் அடிப்படையில் ஆண்டுக்கு 19.6 சதவிகித வளர்ச்சியைக் கொண்டுள்ளது. மேலும், வருவாய் அடிப்படையில் 7.07 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவை மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள தொகை மட்டும் ரூ.85,003 கோடியாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,