பிரதமர் நரேந்திர மோடி இன்று சண்டிகரில் நடைபெற்ற இரண்டாவது உலக யோகா தினத்தில் பங்கேற்றார். அவருடன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு முதல், ஜுன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் சண்டிகரில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து உரையாற்றினார். இதில் ஹரியானா, சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பல வயதினரும் பாதுகாப்பு படையினரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, “யோகா வாழ்வில் ஒழுக்கத்தையும் நேர்மையும் கற்று தருகிறது. மேலும் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. யோகா பயிற்சியாளர்கள் இதனை கட்டுப்படுத்தும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொது மக்களிடம் இதற்கான கருத்து பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் யோகாவுக்கு, சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும்” என்றும் பேசியுள்ளார். இந்நிலையில், மத்திய அரசு தேர்ந்தெடுத்த யோகா பயிற்சியாளர்களில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், பயிற்சியாளர்களுக்காக விண்ணப்பித்த சிறுபான்மையினத்தவர்களை கலந்தாய்வுக்குக்கூட அழைக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. சிறுபான்மையினரை யோகா பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டாம் என அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக, மத்திய ஆயுஸ் அமைச்சகத்தின் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.�,