இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.74 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீர் ஏற்றத்தைச் சந்தித்தது. இந்த விலை உயர்வானது கடந்த 55 மாதங்களில் அதிகபட்ச அளவாகும். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மும்பையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.81.92 ஆகவும், டீசல் விலை ரூ.69.50 ஆகவும் உள்ளது. இது அதிகபட்ச அளவாகும். இந்திய நகரங்களிலேயே பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி மும்பையில் மிக அதிகம் என்பதால் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் தாக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் விரைவில் தெரிந்துவிடும்.
மும்பையைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.76.85 ஆகவும், டீசல் விலை ரூ.68.90 ஆகவும் உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.74.08 ஆகவும், டீசல் விலை ரூ.65.31 ஆகவும் உள்ளது. அதேபோல, கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.76.78 ஆகவும், டீசல் விலை ரூ.68.01 ஆகவும் இருக்கிறது. கச்சா எண்ணெய் சார்ந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் அமெரிக்க அரசின் கொள்கை மாற்றங்களால் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரங்கள் பெரிதும் மாறியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.�,