வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று புகைப்படம் எடுத்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் தேதியன்று தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மல்கஜ்கிரி தொகுதியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த மாரி ராஜசேகர் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு நெருக்கமானவர் வெங்கடேஷ். டிஆர்எஸ் கட்சியின் வாக்குச் சாவடி ஏஜெண்டாக செயல்பட்டவர்.
வாக்குப் பதிவுக்குப் பின்னர், மல்கஜ்கிரி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் அனைத்தும் பொகாரம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் தேர்தல் அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் சென்று பார்வையிடலாம். ஆனால், அதனை மீறி உள்ளே சென்று புகைப்படம் எடுத்துள்ளார் வெங்கடேஷ். சமூகவலைதளங்களில் இந்த புகைப்படம் பரவவே, தற்போது விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.
இது பற்றி காங்கிரஸ் கட்சி தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தது. இதன் அடிப்படையில், நேற்று (ஏப்ரல் 13) கீசரா போலீசாரால் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, உடனடியாக அவர் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வெங்கடேஷின் மனைவி மாதுரியும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்தவர் தான். வாக்கு எந்திரங்களுடன் வெங்கடேஷ் போஸ் கொடுத்த புகைப்படத்தோடு, அவர் தெலங்கானா அமைச்சர் மல்ல ரெட்டியுடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த மல்ல ரெட்டியின் மருமகன் தான் மாரி ராஜசேகர் ரெட்டி என்பதே இதற்குக் காரணம்.
இது பற்றிப் பேசிய கீசரா காவல் ஆய்வாளர் நரேந்திர கவுட், “பூட்டி சீல் வைக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததற்காக வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் 73.20 சதவிகித வாக்குகள் பதிவானது. மாறாக, தற்போதைய மக்களவைத் தேர்தலில் 62.69 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளது.
�,