சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ் கர்ணன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா மாநில உயர்நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு கர்ணன் தடைவிதித்தார். மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உச்சநீதிமன்றம் கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து கர்ணன் பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார்களைத் தெரிவித்திருந்தார். கர்ணனின் புகார் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் மாண்புகளைக் குலைக்கும் வகையில் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக ஏற்று விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இரண்டு முறை உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு கடந்த மார்ச் 10ம் தேதி தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் எனக்கூறினார். இதைத்தொடர்ந்து, நீதிபதி கர்ணன் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அரசியல் சாசன பிரிவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதற்காகவும் நீதிபதிகள் ரூ.14 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள நீதிபதி கர்ணன் வீட்டிற்கு 100க்கும் மேற்பட்ட போலீஸார் நீதிபதி கர்ணனிடம் வாரண்ட் உத்தரவை அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக, நீதிபதி கர்ணனைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவரது வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் தான் பேசினார்.
ரமேஷ்குமார் கூறியதாவது:இன்று நீதிபதி கர்ணன் வீட்டுக்கு கொல்கத்தா மாநில போலீஸ் ஏடிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி, 2 ஐஜி-க்கள், 100 மேற்குவங்க போலீஸார், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். வீட்டு காவலாளியை அடித்து உதைத்துள்ளனர். அவர்கள் நீதிபதி கர்ணனிடம் வாரண்ட் அளிக்க முன்வந்தனர். நாங்கள் அதை வாங்க மறுத்துவிட்டோம். ஆனால், அவர்கள் அந்த வாரண்ட்டை கதவில் ஒட்டிச் சென்றுள்ளனர். அதில் மார்ச் 31ம் தேதி ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் ஆஜராக மாட்டோம். ஒரு நீதிபதிக்கு கடந்த பிப்ரவரியில் இருந்து வேலை தரவில்லை. வாரண்ட் பிறப்பிக்கிறார்கள். இதெல்லாம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. நீதிபதியை அவமதித்ததற்காக அந்த 7 நீதிபதிகளும் தலா ரூ. 2 கோடி என்று ரூ.14 கோடி இழப்பீடாக கேட்டுள்ளோம். இதனை மக்களின் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டுசெல்ல 31ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீதிபதிக்கு உயர் சாதி நீதிபதிகள் செய்யும் கொடுமை. இதே போல புகார்கள் பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன் மீது உள்ளது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? என்று கூறினார்.�,