தமிழக அரசின் மருத்துவத் துறையில் இருக்கும் 1000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மருத்துவத் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.
“தமிழக அரசின் மருத்துவத் துறையில் உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் உட்பட 1000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் அரசு மருத்துவத் துறை ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அரசுக்கு 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. காப்பீடு திட்டம் சார்ந்த கூட்டம், மருந்துகள் வழங்கல், மருத்துவம் மற்றும் மருத்துவம்சார் படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கல், தேர்வுப் பணி உள்ளிட்ட பணிச்சுமையால் மருத்துவத் துறை ஊழியர்கள் தவிக்கின்றனர்.
எனவே, முதல்வர் காப்பீடு திட்டத்தைத் தனி துறையாகப் பிரித்து அதற்குரிய தட்டச்சாளர், உதவியாளர், நிர்வாக அலுவலர் பணியிடத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். 2010ஆம் ஆண்டுக்குப் பின் அரசு இணையதளத்தில் உதவியாளர், கண்காணிப்பாளர் ஆகியோரின் பதவி மூப்புப் பட்டியலை வெளியிடவில்லை.
மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அரசு நியமித்துவருகிறது. இவர்களின் அலுவலக பணிகளை செய்ய 1,000 மருத்துவத் துறை ஊழியர்கள், உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என ஆயிரம் காலி பணியிடங்கள் காலியாக உள்ளதால், அந்தப் பணிகள் முடிக்காமல் கிடப்பில் உள்ளன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் ஜனவரி இறுதியில் சென்னையில் மறியலில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மருத்துவத் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்கும்” என்று நம்பிராஜன் தெரிவித்தார்.�,