உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழர் ஒருவரைத் தனது சொந்த மாவட்டமான கோரக்பூரின் மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்றுவருகிற நிலையில், சமீபத்தில் அங்கு கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாஜகவிடம் இருந்த கோரக்பூர் தொகுதி பறிபோனதால், அடுத்த ஆண்டு வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க முதல்வர் யோகி 37 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 43 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணியிடை மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதில், சிவகங்கையைச் சேர்ந்த கே.விஜயேந்தர பாண்டியன் என்பவரை கோரக்பூர் மாவட்ட ஆட்சியராக நியமித்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரியான விஜேயேந்திர பாண்டியன் கோரக்பூரில் இன்று (மார்ச் 19) முதல் பொறுப்பேற்றுள்ளார்.
இவரைப் போன்று, உத்தரப் பிரதேசத்தில் 14 தமிழர்கள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூர் மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்றுள்ள விஜயேந்திர பாண்டியன் சிவகங்கையைச் சேர்ந்தவர். இவர், ஓவர்சீயர் பிள்ளை தெருவைச் சேர்ந்த எஸ்.கற்பூரசுந்தர பாண்டியன் எனும் நீதிபதி குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். வழக்கறிஞருக்குப் படித்துமுடித்துவிட்டு, யுபிஎஸ்சி குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார்.
இதற்கு முன்பு இவர் எட்டவா மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் சண்டவுலியில் தலைமை வளர்ச்சி அதிகாரியாகவும், பின்பு லலித்பூர், அம்பேத்கர் நகர், பலியா, கான்பூர் ஊரகம் மற்றும் பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும் இருந்தார். பிறகு மாநில கூடுதல் தேர்தல் அதிகாரி, உ.பி. மாநில போக்குவரத்துக் கழகத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளிலும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இதையடுத்து, மேற்கு பகுதி மாவட்ட காஸ்கன்ச் பகுதியில் மதக் கலவரம் உருவாகும் முன்பு வரை ஆட்சியராக இருந்தார். தற்போது கான்பூர் வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியதை அடுத்து, கோரக்பூரில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .�,