வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு இன்று காடுவெட்டியில் நடைபெறவுள்ளது. குருவின் படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைக்கிறார்.
வன்னியர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 25ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து குருவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான காடுவெட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அவருக்குச் சொந்தமான தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
பாமக சார்பில் குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 30ஆம் தேதி புதுச்சேரியிலுள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய அன்புமணி, குருவுக்கு அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும். கோனேரிக்குப்பத்தில் தொடங்க உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையின் (தனியார்) சட்டக்கல்லூரிக்கு குருவின் பெயர் வைக்கப்பட்டு நினைவுச் சிலை அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குருவுக்கு காடுவெட்டியில் இன்று (ஜூன் 15) படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அரியலூர் மாவட்ட பாமகவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று குருவின் படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைக்கிறார். அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி உள்ளிட்டத் தலைவர்கள் குருவுடனான நினைவுகளை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
இதுகுறித்து பாமக தலைவர் கோ.க.மணி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாவீரன் ஜெ.குரு, வன்னியர் சங்க தலைவர் – சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அவர்களின் திரு உருவப் படத்திறப்பு – நினைவேந்தல் – புகழஞ்சலி நிகழ்வு 15.6.2018 வெள்ளிக்கிழமை காலை – 10.00 மணிக்கு காடுவெட்டியில் நடைபெற உள்ளது என்பதை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.�,”