�ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தியைக் கைது செய்வதற்கு ஜூலை 10ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை மார்ச் 24ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஏப்ரல் 16ஆம் தேதி வரை அவரைக் கைது செய்யக் கூடாது என சிபிஐக்கு தடை விதித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தியை மே 2ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்றும் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் பாட்டியாலா நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி இந்த மனு இன்று (மே 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏர்செல் – மேக்ஸிஸ் வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 2ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஜாமீன் மனு மீதான விசாரணையை அதன் பிறகு நடத்த வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதீஷ் ரானா கோரிக்கை வைத்தார். சிபிஐ தரப்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரை அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.�,