இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்திடம் மத்திய அரசு ஆழ்ந்த கவலையை தெரிவித்திருப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று காலை வழக்கம்போல் அவை கூடியதும், சபாநாயகரின் உரைக்குப்பின்னர் விவாதம் தொடங்கியபோது, அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதலில் மத்திய அரசு ஏன் மௌனமாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் தெரிவித்து பேசுகையில், நாங்கள் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைதியாக இருக்கிறோம் என கூறுவது முற்றிலும் தவறானது. இதுபோன்ற நடவடிக்கையில் பா.ஜனதா அரசு ஒருபோதும் அமைதியாக இருந்தது கிடையாது. இது எங்களுடைய கலாச்சாரமல்ல. எதிர்பார்த்ததை விட நாங்கள் அதிகமான பணியை செய்து வருகிறோம். உடல்நிலை சரியில்லாமல் நான் ஓய்வு பெற்று வந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம், இந்திய அதிகாரிகளிடமும் பேசியுள்ளேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்திட கேட்டுக்கொண்டேன். பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவர் தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் என்னுடைய அமைச்சகத்திடம் இருந்து தினமும் கேள்வி கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.
இந்தியர்கள் மீதான தாக்குதலை உயர்மட்ட அளவில் இந்திய அரசு அமெரிக்காவிடம் எடுத்துச் சென்று உள்ளது. அமெரிக்காவிடம் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்து உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்யவும், இந்தியர்கள் மீதான தாக்குதல் விவகாரங்களில் துரிதமான விசாரணை நடத்தவும் வலியுறுத்தி உள்ளோம். வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்ற போது அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று அவர் பேசினார்.�,