Jசொத்து வரிக் கணக்கு தொடர்பான வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளின் விவரங்களைத் தெரிவிக்க வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 1997-98ஆம் ஆண்டு தன் சொத்து வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் மதிப்பு 4.67 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்திருந்தது.
ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மதிப்பு 3.83 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வழக்கை மீண்டும் மதிப்பீடு செய்து வருமான வரித் துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த வருமான வரித் துறை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மாற்றியமைத்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து வருமான வரித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளின் விவரம் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து தெரிவிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.�,