தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் தாங்கள் அனுப்பிய நோட்டீஸிற்கு உரிய விளக்கம் அளிக்காததற்கு ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, ரயில் டிக்கெட்டுகளிலும், விமான போர்டிங் பாஸிலும் பிரதமர் மோடி படம் இருந்தது குறித்து தேர்தல் ஆணையத்துக்குப் புகார் வந்தது. இதுதொடர்பாக ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம். ஆனால், இதுவரை நோட்டீஸிற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளருக்கும், ரயில்வே துறை செயலாளருக்கும் நேற்று (ஏப்ரல் 2) தேர்தல் ஆணையச் செயலாளர் அஜய் குமார் கடிதம் எழுதியிருந்தார். அதில், ரயில் டிக்கெட்டுகளிலும், விமான போர்டிங் பாஸிலும் பிரதமர் படம் இருந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
ஆனால், இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது தங்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தச் செயலுக்குக் காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் தங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமைக்குள் (ஏப்ரல் 4) விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.�,