தமிழகக் காவல் துறையில் பணி செய்யும் பெண் காவலர் ஒருவர், தனது மாத ஊதியத்திலிருந்து காப்பீட்டுத் திட்டத்துக்கு பணம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு அக்டோபர் 5ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மத்தியக் காவல் நிலையத்தில் பணிசெய்யும் பெண் காவலர் பாலகிருஷ்ணம்மாள், மாவட்டக் கண்காணிப்பாளர் மகேந்திரனுக்கு அக்டோபர் 5 அன்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். நியூ ஹெல்த் இன்ஷ்யூரஸ் திட்டத்துக்கு, ஊதியத்திலிருந்து மாதாமாதம் ரூ.180 பிடித்தம் செய்யப்படுகிறது. 2018 ஜனவரி 1 முதல் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று அவர் கோரியுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
“2016ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்குச் சென்னை சிம்ஸ், எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளில் உள்நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெற்ற கட்டணத்துக்கான பில்களையும் ரசீதுகளையும் ரூ.1.58 லடத்துக்குக் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் சிகிச்சை பெற்றுக்கொண்ட நோய், மேற்படி நிறுவனம் காப்பீட்டுக்கென வரையறை செய்துள்ள நோய்களுக்குக் கீழ் இல்லை என்று கைவிரித்துவிட்டது. வேறு வழியில்லாமல் கடன் வாங்கிப் பணம் செலுத்தினேன். அவசர சிகிச்சைக்குப் பயன்படாத இந்த இன்ஷ்யூரன்ஸ் எனக்குத் தேவையில்லை” என்று பாலகிருஷ்ணம்மாள் குறிப்பிட்டிருக்கிறார்.
தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் ஐ.பி.எஸ், அவர்களைத் தொடர்புகொண்டு பாலகிருஷ்ணம்மாள் பெண் காவலர் புகார் பற்றிக் கேட்டோம். இன்னும் புகார் வரவில்லை என்றார். நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கீம், தமிழக காவலர்கள் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தோம், காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலும் மாதச் சம்பளத்தில் ரூ 180 பிடித்தம் செய்து நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு செலுத்துகிறார்கள். மாதம் சுமார் ரூ 1.80 கோடி, தமிழகக் காவல் துறை மூலமாக இந்த நிறுவனத்துக்குப் போகிறது. ஆனால் காவலர்கள்தான் பலனடைய முடியவில்லை என்கிறார்கள் வேதனையாக.�,