�
தமிழகத்தில் பத்தாம், பதினோராம், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரங்களில் தேர்வு மையங்களில் மின்சாரம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அரசுப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களில் மின் தடை வரக் கூடாது. தேர்வு நாளன்று மின்சாரம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் மின் துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மின் தடை தொடர்பாகப் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்று தில்லுமுல்லுக்கு இடம் தராமல், பொதுத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் மதிய வேளைகளில் அடிக்கடி மின்சாரம் இல்லாமல் போவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், தேர்வு மையங்களில் தேர்வின்போது மின்சாரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.�,