tசிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும்!

public

பதினெட்டு வயது பூர்த்தி அடையாத சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை தி.நகர் பகுதியில் கடந்த 2019 செப்டம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் ஆட்டோ மோதியதில், அந்த வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு, கை கால், என உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்க நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக 18 வயது பூர்த்தி ஆகாத சிறுவன் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்து என்பதால், இழப்பீடு வழங்க மறுத்து மனுவை நிராகரித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு ஏழு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை நீதிமன்றத்தில் சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று(மார்ச் 5) நீதிபதி எஸ்.கண்ணம்மாள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காப்பீட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 18 வயது பூர்த்தி ஆகாதவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது என்று விதிகள் உள்ளது. அதை மீறி சிறுவன் வாகனத்தை ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் இழப்பீடு வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

மேலும், இந்த வழக்கில் இழப்பீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு தொடர்பான வழக்குகள் குவிந்து விடும். மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான சரியான தருணம் இது. இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழாத வகையில் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது என்று தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக, போக்குவரத்து விதிகளை மீறி, 18 வயதிற்கு குறைவான சிறுவர் – சிறுமியர் வாகனங்கள் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். வாகனங்கள் வேறு நபர்களுக்கு சொந்தமாக இருந்தால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், மூன்று மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *