சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து நிலம் அளிப்பதாகக் கூறிய தமிழக முதல்வரைக் கண்டித்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.
சென்னை- சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து நிலம் கொடுக்கிறார்கள். சிலர் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (ஜூன் 24) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் அப்பட்டமான பொய் சொல்வதாகக் கூறியுள்ள கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிராமன், விவசாயிகளின் நிலைமையை விளக்கி குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு பதிவு தபால் அனுப்பப்போவதாகக் கூறினார்.
சேலத்தில் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் அளவிடும் பணிகள் 7 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு எதிராகச் சமூக வலை தளத்தில் கருத்துகளைப் பதிவிட்ட காரணத்திற்காகச் சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான செல்வராஜ் நேற்றிரவு (ஜூன் 24) கைது செய்யப்பட்டார். கலவரத்தைத் தூண்டுவதாக காவல் துறையினர் இவர் மீது வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.�,