இந்தியப் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை..!
ஜெர்மனியைச் சேர்ந்த குழந்தைகள் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். உலகையே திரும்பிப் பார்க்கவைத்த போராட்டம் அது. அது என்னவென்று பார்ப்பதற்கு முன், ஒரு முக்கியமான தகவலை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்தியக் குழந்தைகள் குறித்த ஓர் ஆய்வை ‘சைபர் க்ரைம்’ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், “இந்தியாவில் இணைய விளையாட்டுகள் குழந்தைகள்மீது ஆபத்தான வன்முறையை ஏவுகின்றன. சமூக விரோதச் செயல்களை நோக்கிக் குழந்தைகளைத் தள்ளும் அளவுக்கு வன்முறையை விதைக்கின்றன இவ்விளையாட்டுகள். செல்பேசிகள் குழந்தைகளை வேட்டையாடும் கொலைக் கருவிகள்” என்று எச்சரித்துள்ளனர்.
சரி, குழந்தைகள் இணைய விளையாட்டுகளில் ஈடுபட யார் காரணம்? இந்தக் கேள்விக்கான பதிலாக இருக்கிறது ஜெர்மனி சிறுவர்களின் போராட்டம். ஜெர்மனியில் பெற்றோரின் செல்போன் மோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அந்த நாட்டின் ஹம்பர்க் நகரில் அண்மையில் பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
அப்பேரணியில் இடம்பெற்ற இவ்வாசகம், அனைத்து பெற்றோரையும் கவலைக்கொள்ள செய்தது. “தயவுசெய்து என்னோடு விளையாடுங்கள். செல்போனோடு வேண்டாம்” என்ற வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக வலம் வந்தனர் சிறுவர்கள்.
வெறும் ஏழு வயதான சிறுவன், இந்தப் பேரணியைத் தலைமை ஏற்று நடத்தினான். “பெற்றோர்கள் செல்போனில் மூழ்கிவிடக் கூடாது. பிள்ளைகளோடு அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களோடு விளையாட வேண்டும். இந்தப் பேரணியைப் பார்த்தாவது அவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறேன்” என்றான் எமிலி ரஸ்டிக் எனும் சிறுவன்.
இந்தப் பேரணியில் 400க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். வெறும் 5,6 வயதுடைய குழந்தைகள் எல்லாம் ‘என் பெற்றோர் என்னோடு விளையாடாமல் செல்போனுடன் மட்டுமே விளையாடிக்கொண்டிருக்கிறனர்’ என்று வருத்தப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது.
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதற்குப் பெற்றோர்களே முழு முதல் காரணம். பிற காரணிகள் பின்தொடர்ந்து வருபவைதான். நாளை இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட இதேபோன்ற போராட்டம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதற்குள் குழந்தைகளை நோக்கித் திரும்புங்கள் பெற்றோர்களே..!
**- நரேஷ்**�,”