�
தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்து வரும் மன அழுத்தம் காரணமாக கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுக்கொண்டே வேலை பார்ப்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். மன அழுத்தம் காரணமாக அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் சாலட். செய்வதும் எளிது. சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும் இந்த கிரீக் சாலட் வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும்.
**எப்படிச் செய்வது?**
வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் தலா ஒன்று எடுத்து சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும். இரண்டு கெட்டியான தக்காளியை எடுத்து விதைகளை எடுத்துவிட்டு சதுரங்களாக வெட்டவும். 100 கிராம் பனீரையும் சதுரமான துண்டுகளாக வெட்டவும். நான்கு லெட்யூஸ் (சாலட்) இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். இவை எல்லாவற்றையும் ஒரு பெரிய பௌலில் சேர்க்கவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில், இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ், இரண்டு டீஸ்பூன் ஓரிகானோ, அரை டீஸ்பூன் பூண்டு பவுடர் அல்லது இரண்டு பற்கள் நறுக்கிய பூண்டு எல்லாவற்றையும் போட்டு மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். நறுக்கிய காய்கறி கலவையுடன் சாலட் டிரெஸ்ஸிங்கை நன்றாகக் கலந்து பரிமாறவும்.
**சிறப்பு**
அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் இந்த சாலட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
�,