ஜேம்ஸ் பாண்ட் படத்திலிருந்து ஹாலிவுட் இயக்குநர் டேனி பாய்ல் விலகியுள்ளதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் தொடரின் கடந்த நான்கு படங்களில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகர் டேனியல் கிரெய்க் நடித்திருந்தார். ஐந்தாவது முறையாக தற்போது டேனி பாய்ல் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துடன் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்ட் படங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
ஜேம்ஸ் பாண்ட் தொடர் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டதில்லை. டேனியல் கிரெய்க்கின் ஓய்வை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தை இறப்பது போல் திரைக்கதையை மாற்றுமாறு தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி டேனி பாய்லிடம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டேனி பாய்ல் படத்திலிருந்து விலகியுள்ளார். இது குறித்த தகவலை இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி சன்’ என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது.
மைக்கேல் ஜி.வில்சன், டேனியல் கிரெய்க் ஆகியோருக்கும் டேனி பாய்லுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் விலகியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பைன்வுட் ஸ்டுடியோஸில் டிசம்பர் மாதம் தொடங்க இருந்த நிலையில் டேனி பாய்லின் விலகல் படத்தின் தயாரிப்பில் பின்னடைவை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேம்ஸ் பாண்டின் 26ஆவது படத்தில் கறுப்பின நடிகர் ஒருவரை நடிக்க வைக்க விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 25ஆவது படத்தில் அந்தக் கதாபாத்திரத்தை இறப்பது போல் காட்ட வேண்டிய தேவை என்ன, இயக்குநர் மறுத்தும் இதை வலியுறுத்துவது ஏன் என்ற கேள்விகளும் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.�,