தமிழகத்தில் இந்த ஆண்டு தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் எண்ணெய் உற்பத்தி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, உடுமலைப்பேட்டை, தாராபுரம், கோபிச்செட்டிப்பாளையம் உள்பட பல பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக பரவலாக மழை பெய்ததால், அனைத்து பகுதிகளிலும் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட தேங்காய் வரத்து கூடியுள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எண்ணெய் தயாரிப்பதற்காக விவசாயிகள் தேங்காயை வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள சேலத்தை சேர்ந்த விவசாயிகள், ‘‘கடந்த சில மாதங்களாக தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் உற்பத்திக்காக தேங்காய்களை அதிக அளவில் வெயிலில் உலர்த்தி வருகிறோம். நன்கு காய்ந்த கொப்பரை, வேளாண்மை உற்பத்தி நிலையத்துக்கும், செக்கு ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அங்கு எண்ணெயாக உற்பத்தி செய்து தமிழகத்தில் பல இடங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்’’ என்றனர்.
**-ராஜ்**
.