கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. அதுபோன்ற சூழலை தவிர்க்கும் வகையில், 2021-2022ஆம் ஆண்டில் இரு பருவப் பொதுத் தேர்வு முறை கடைபிடிக்கப்படும் என்று சிபிஎஸ்இ கடந்த ஆண்டே அறிவித்தது.
அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவத் தேர்வு ஏப்ரல்- மே மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று(மார்ச் 11) இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரையும் நடைபெறுகிறது.
இதுகுறித்த முழுமையான தகவலை சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே அதிக இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை கருத்தில் கொண்டே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பருவத் தேர்வு முடிந்த பிறகுதான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான [தேர்வு அட்டவணை]( https://www.cbse.gov.in/cbsenew/documents//ClassX_2022.pdf)
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான [தேர்வு அட்டவணை]( https://www.cbse.gov.in/cbsenew/documents//ClassXII_2022.pdf)
**-வினிதா**