வீடுகளின் விலையை மலிவாக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய ஜி.எஸ்.டி. முறையில் வீடுகளின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், ஆடம்பர சொத்துக்களின் விலையும், நில மதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் கட்டப்படும் வீடுகளின் விலையும் ஜூலை 1-ம் தேதி முதல் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜிஎஸ்டி முறையில், கட்டுமானத் துறைக்கு 18 சதவிகித வரியை அரசாங்கம் விதித்துள்ளது. சொத்தின் மொத்த மதிப்பில், மூன்றில் ஒரு பங்குக்கு, 18 சதவிகிதம் வரியாகச் செலுத்தப்பட வேண்டும். அதாவது, சொத்தின் முழு மதிப்பீட்டில் 12 சதவிகிதம் வரியாகச் செலுத்தப்பட வேண்டும். இதன் தாக்கம் ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, கிடங்குத் துறை ஆகியவற்றின் மீது இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கட்டுமானத் துறைக்கு தேவையான சிமெண்ட், செங்கல், டைல்ஸ், ஓடுகள், பீங்கான், நூலிழையால் ஆக்கப்பட்ட கட்டுமானக் கூறுகள் போன்ற பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இரும்பு மற்றும் எஃகு போன்ற பொருட்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 12 சதவிகித ஜி.எஸ்.டி. வரி 6 சதவிகிதமாக மாறும் எனவும், இதனால் நிறைய மாநிலங்களில் தற்போது கட்டுமான வேலைகளில் ஈடுபட்டுள்ள நுகர்வோர், ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் வரிகளுடன், கூடுதலான வரியைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், நிலத்தின் விலைக்கு அளிக்கப்படும் 33.33 சதவிகித தள்ளுபடியால், வீட்டுமனைகள் வாங்குவோர், நிலத்தின் மதிப்பில் 30 சதவிகிதத்துக்கு,15 சதவிகிதம் சேவை வரியாகச் செலுத்த வேண்டும். இதனால் மொத்த சேவை வரி 4.5 சதவிகிதமாக குறையும்.
இதனால் ஏற்கனவே மலிவாக இருக்கும் வீடுகளின் விலை மேலும் குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
�,