பள்ளி மாணவ மாணவியரின் உடல் எடையில் 10 சதவிகிதம் மட்டுமே புத்தகப்பையின் எடையாக இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு.
மாணவ மாணவியர் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பையின் எடை குறித்து நாடெங்கும் விவாதம் நடந்து வருகிறது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த விவாதத்தில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. நேற்று (மே 3) கர்நாடக மாநில கல்வித் துறையானது ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை 1.5 – 2 கிலோ எடையும், 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 2 – 3 கிலோ எடையும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 3 – 4 கிலோ எடையும், 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 5 கிலோ எடையும் கொண்ட புத்தகப்பையை எடுத்துச் செல்லலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
“1ஆம் வகுப்பு, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையன்று புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும். அன்றைய தினம் விளையாட்டு மற்றும் திறன் வளர்ப்பில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,