�
பப்களில் நுழைவதற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் இருக்கின்ற நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பப்களில் நுழைவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் தெலுங்கு திரைப்பட பிரபலங்களிடம் போதைப் பொருள் சப்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஹைதராபாத்தில் உள்ள பப்களில் மதுபானங்கள் தவிர கோகோயின், லேசர்ஜிக் ஆசிட் டைட்டிலேமைடு மற்றும் பிற போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாகவும், சப்ளையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களை பப்களில் சந்திப்பதாகவும் தகவல் வெளியானது. அதனால், பப்களுக்கு வருபவர்கள் 21 வயதை அடைந்தவர்கள் என்பதை உறுதி செய்ய ஆதார் கார்டை காட்ட வேண்டும். மேலும், பப்களுக்கு வருபவர்கள் குறித்த தகவல்களைத் தனியாக குறித்து வைக்க பப் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை 21 வயதுக்குக் கீழானவர்கள் பப்களுக்கு நுழைவதே தடுப்பது மட்டுமல்லாமல், போதைப் பொருள் சப்ளையாளர்களை கண்டுபிடிப்பதில் கலால் துறைக்கு உதவியாக இருக்கும்.
இது குறித்து கலால் துறை கண்காணிப்பாளரும்,சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவருமான எஸ். சீனிவாஸ் ராவ் கூறுகையில், ” பப்களுக்கு லைசென்ஸ் வழங்கும்போதே, இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆதார் கட்டாயமாக்கப்படுவது புதிய உத்தரவு இல்லை. ஏற்கனவே உள்ள உத்தரவு தான் அமல்படுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.�,