ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்த ரயிலில் 2,000 கிலோ நாய் இறைச்சி கைப்பற்றப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் போலீசார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலொன்று, இன்று (நவம்பர் 17) காலை சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தது. இந்த ரயிலில் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று காலை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலைச் சோதனையிட்டனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
சரக்குப் பெட்டியில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட 20 பார்சல்களில் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள், கொண்டுவரப்பட்ட இறைச்சி ஆட்டிறைச்சி அல்ல என்று தெரிவித்தனர். இறைச்சியின் தன்மை மற்றும் எலும்பு அமைப்பை வைத்து, ஜோத்பூரில் இருந்து நாய் இறைச்சி பார்சல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஜோத்பூரில் உள்ள தனியார் நிறுவனமொன்று இதனை அனுப்பியுள்ளதாகவும், யாருக்கு இது அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.�,