காரைக்காலில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் மாசு கலந்துள்ளதால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 190 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் ரூ.50 கோடி செலவில் புதிய நீர் தேக்கத்தொட்டி மற்றும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணியைப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சமீபத்தில் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக குடியிருப்புப் பகுதிகளில் போக்லைன் இயந்திரம் கொண்டு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியின்போது, பழைய குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்துள்ளன. இதைச் சரிவர பராமரிக்காமல், மண்போட்டு மூடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் உபயோகத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் மண் கலந்து குடிநீரில் வந்துகொண்டிருக்கிறது. இந்த மாசு கலந்த குடிநீரைக் குடிக்கும் பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாள்களில் மட்டும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சுமார் 190 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கு குடிநீரில் கலக்கும் அசுத்தம்தான் காரணம் என்று அங்கு பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) மட்டும் 40க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சரும் திமுக அமைப்பாளருமான நாஜிம், அரசு பொது மருத்துவமனைக்குப் பாதிக்கப்பட்டவர்களைக் காண சென்றுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,