டெங்குவால் சிறுவர்கள் உயிரிழப்பது அதிகரித்துவருகிறது. இன்று (செப். 30) சென்னையில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு மாற்று மர்மக் காய்ச்சல் நோய்களைத் தடுக்க அரசு தவறிவிட்டதாகப் பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்நிலையில் சென்னையில் மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. அம்பத்தூர் அருகே உள்ள கல்யாணபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சாம்ராஜின் மகள் சாய் பெனிட்டா காய்ச்சல் காரணமாக கடந்த 28ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெங்குவால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று குழந்தை உயிரிழந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சனா (6) காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சஞ்சனாவும் இன்று காலை உயிரிழந்தார்.
திண்டுக்கல் பெரிய கலையமுத்தூரைச் சேர்ந்த பீர்பானு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரும் இன்று உயிரிழந்தார்.
இது மட்டுமின்றி மதுரையைச் சேர்ந்த திருச்செல்வி (11), திண்டிவனம் நிவேதா (5), கள்ளக்குறிச்சி கிருஷ்ணன் (34), நெல்லை மகா நீஷா, உள்ளிட்டோரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் 49 பேரும், ஈரோட்டில் 27 பேரும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு 14 பேரும், பிற காய்ச்சலுக்கு 32 பேரும் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
�,