மத்திய அரசின் ஆதரவு இல்லாததால் தென் மாநிலங்களிலேயே குறைவான வளர்ச்சியுடைய மாநிலமாக ஆந்திரா உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு இன்று (மே 1) கலந்துகொண்டு பேசினார். அப்போது, “தொழிற்சாலைகளுக்கு எங்களின் அரசு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குகிறது. இது ஒரு தடையற்ற மற்றும் தரமான மின்சக்தி விநியோகத்திற்கு வழிவகுக்கிறது.
ஆந்திரா வளர்ந்துவருகிறது. எனினும் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவுகூட இல்லாததால், தென் மாநிலங்களிலேயே குறைவான வளர்ச்சியுடைய மாநிலமான ஆந்திரா உள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.
தொழிலாளர்களின் நலனுக்காக தனது அரசு பாடுபடுவதாகத் தெரிவித்த சந்திரபாபு, “தொழிலாளர்களுக்காக புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்மூலம் 10 நாட்களில் காப்பீடு தொகை வழங்கப்படும். மேலும் 14 தொழிலாளர் சட்டங்களும் உள்ளன. தொழிலாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசை, தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் சந்திரபாபு விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு, “ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று திருப்பதி ஏழுமலையான் அமர்ந்திருக்கும் ஊரில் வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமல் மக்களுக்கு மோடி துரோகம் இழைத்துவிட்டார். சிறப்பு அந்தஸ்துக்காக நான் 29 முறை டெல்லிக்குச் சென்றேன். ஆனால் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இறுதிவரை சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.�,