குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 9) தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாகக் குக்கர் சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் அணி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஆகவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்பு புதிய கட்சி பெயரில் இயங்கவும், குக்கர் சின்னத்தில் போட்டியிடவும் அனுமதிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, ‘எங்கள் அணிக்கு ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் அணிக்குக் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும். மேலும், அனைத்திந்திய அம்மா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
அப்போது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. இந்த நிலையில், குக்கர் சின்னம் கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது’ என்று வாதிட்டனர். அதேபோல் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோப்ரா, ‘கட்சியாகப் பதிவு செய்யாத நிலையில் டிடிவி தினகரன் அணிக்குச் சின்னத்தை தேர்தல் ஆணையத்தால் எப்படி ஒதுக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தீர்ப்புத் தேதியைக் குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் புதுக்கட்சி தொடங்கப்படும் என அண்மையில் டிடிவி தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
�,