இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 45,601 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 12 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, சமீப நாட்களாக 35,000க்கும் மேல் ஒரு நாள் பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 45,601 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநில சுகாதாரத் துறை சார்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 28,472 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 12,39,684 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 4,25,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,84,266 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 29,890 ஆக அதிகரித்துள்ளது
மகாராஷ்டிராவில் உச்சபட்சமாக நேற்று ஒரு நாள் பாதிப்பு 10,576 ஆக இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய உச்சமாக 5,849 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜூலை 21 வரை, நாட்டில் மொத்தம் 1,47,24,546 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. ஜூலை 19ஆம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைக் கடந்தது. இந்த நிலையில் அடுத்த மூன்று தினங்களில் ஒரு லட்சம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,