8ஆவது சர்வதேச யோகா தினத்தையொட்டி, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் (ஐடிபிபி) வடக்கு லடாக்கில் தொடங்கி கிழக்கு எல்லை சிக்கிம் வரை பல்வேறு உயரமான இமய மலைத் தொடர்களில் யோகா பயிற்சி செய்தனர்.
லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியா-சீனா எல்லைகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் எல்லை காவல் படையினர் பல ஆண்டுகளாக யோகாவை ஊக்குவித்து வருகின்றனர்.
யோகாவின் உலகளாவிய அங்கீகாரம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடந்த டிசம்பர் 11, 2014 அன்று அறிவித்தது. அதன்படி, முதல் சர்வதேச யோகா தினம் கடந்த ஜூன் 21, 2015 அன்று கொண்டாடப்பட்டது.
இந்த சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எல்லைக் காவல் படையினர் 100 நாட்களுக்கு முன்பே யோகாவை குறித்து விழிப்புணர்வை தொடங்கினர். கடந்த நூறு நாட்களாகவே எல்லைக் காவல் படையினர் பல்வேறு இமய மலைத் தொடர்களில் யோகாசனம் செய்தது அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.
யோகா என்பது உலகம் தற்போது உள்ள சூழலில் மிக முக்கியமானது என்பதை நாட்டுக்கு எடுத்துரைக்க இந்த முயற்சி மேற்கொண்டதாக எல்லை காவல் துறை படையினர் தெரிவித்தனர். அதேபோல இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன என்ற கருப்பொருளை வைத்து, மத்திய அமைச்சர்கள் யோகா தின விழாவில் பங்கேற்க 75 இடங்களை ஆயுஷ் அமைச்சகம் அடையாளம் கண்டு, அங்கு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
.