மதுரையில் நடக்கக்கூடிய திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை திருவிழா. இத்திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறும். கிட்டதட்ட 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் மதுரை மாநகரமே விழாக்கோலம் கொண்டிருக்கும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளும் பக்தர்கள் இன்றி சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றதால், நேரில் கண்டு களிக்க முடியாமல் மதுரை மட்டுமில்லாமல், சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு சித்திரை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
அதுபோன்று, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்துவந்த சித்திரை பொருட்காட்சி இந்தாண்டு, வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
**-வினிதா**