ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரின் வங்கி இருப்பு 1,100 ரூபாய்
தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் 22-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் அன்று 83 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 81 பேர் சுயேட்சைகள். இவர்களில் பல வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்து ஏதுமில்லை என்றும், சிலர் வங்கிக்கணக்கில் மிகக்குறைந்த தொகையே இருப்பில் இருப்பதாகவும் கணக்கு காட்டியுள்ளனர். உதாரணமாக, வில்லிவாக்கம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கும் சுயேட்சை ஒருவர் 5,000 ரூபாய் மட்டும்தான் தன் வங்கிக்கணக்கில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். டெபாசிட் தொகையான 10,000 விட இது குறைவாகும். இது எல்லாவற்றுக்கும் சிகரமாக நட்சத்திரத் தொகுதியாக பார்க்கப்படும், ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய வங்கிக்கணக்கில் ரூ.1,100 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பவர்களிலேயே ஈரோடு மேற்கு திமுக வேட்பாளர் எஸ்.முத்துசாமிதான் பணக்காரர். அவரது சொத்து மதிப்பு கடந்த முறையைவிட இரட்டிப்பாகியுள்ளது. 2011 தேர்தலின்போது அவரது சொத்து மதிப்பு 7.62 கோடி ரூபாயாகும். இந்தத் தேர்தலில் அவரது சொத்து மதிப்பு 13.45 கோடியாக உயர்ந்துள்ளது. தன்னுடைய தென்னந்தோப்பின் மதிப்பு உயர்ந்ததால்தான் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள், “சுயேட்சைகள், வேட்புமனுத் தாக்கல் படிவத்தில் சொத்து விவரங்களை ஒழுங்காக குறிப்பிடுவதில்லை. இந்த மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்கள்.�,”