ஜூன் 1ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்ட பொதுப்பெட்டிகள், மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்டதாக மாற்றப்பட்டு முன்பதிவு செய்து டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் இன்னும் வழக்கமான ரயில்களாக இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை.
தென்னக ரயில்களில் வழக்கமான ரயில்கள் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட அளவில் இயக்கப்படுகிறது. தமிழக அரசு முழு அளவில் ரயில்களை இயக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்து விட்டது. ஆனாலும் முழு அளவில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வார்கள். இப்போது அதுவும் முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டு விட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். கட்டண பிரச்சினை மட்டுமில்லாமல் தினசரி பொதுப்பெட்டியில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
சில மண்டலங்களில் ஜூன் மாதம் முதல் இந்த பெட்டிகளுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி போர்ட்டலில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, “மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றுவதற்காகத்தான் இந்த நடவடிக்கை” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே வருகிற ஜூன் 1ஆம்தேதி முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்ட பொதுப்பெட்டிகள் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
**-ராஜ்**�,