–
ராம் ரஹீமின் தேரா சச்சா சௌதா அமைப்புக்குச் சொந்தமான 473 வங்கி கணக்குகளில் ரூ. 74.96 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஹரியானாவில் சிர்சாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங்கிற்கு பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரொஹ்டக் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். முன்னதாக, ராம் ரஹீம் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் பலர் கொல்லப்பட்டனர், ஏராளமான பொது சொத்துக்கள் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றம் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களின் மதிப்பைக் கணக்கிட்டு, அதை, தேரா சச்சா சவுதா அமைப்பிடமிருந்து வசூலிக்க, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ராம் ரஹீம் மற்றும் தேரா சச்சா அமைப்பின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், தேரா சச்சா அமைப்புக்குச் சொந்தமான 473 கணக்குகளில் 74.96 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ராம் ரஹீமிற்குச் சொந்தமான 12 கணக்குகளில் 7.72 கோடி ரூபாய் உள்ளது. அவரது சினிமா தயாரிப்பு தொடர்பான 20 கணக்குகளில் ரூ.50 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்குகளை மாநில அரசு முடக்கியுள்ளது. தேரா சச்சா அமைப்புக்குச் சொந்தமாக சிர்சாவில் மட்டும் ரூ.1,435 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.�,